கூட்டு பலாத்காரம் செய்தவர்களுக்கு உறுதுணை ‘ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீதும் நடவடிக்கை எடுங்கள்’ நெல்லை டிஐஜியிடம் இளம்பெண் பரபரப்பு புகார்

நெல்லை: அரசு வேலை ஆசை காட்டி ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நபர்களுக்கு உறுதுணையாக செயல்படும் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இளம்பெண் நெல்லை சரக போலீஸ் டிஐஜியிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நெல்லை சரக போலீஸ் டிஐஜி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.

பின்னர் அவர் கண்ணீர் மல்க அளித்த பேட்டி: ‘‘கடந்த மே மாதம் 3ம் தேதி பாலா மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் என்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனின் லாட்டரி கமிஷன் வேலை என்று கூறி ராமநாதபுரத்தில் ஏஜென்டாக இருக்கும் ஜெயபாலை பார்க்க வரும்படி பாலா ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து என்னை காரில் அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு ஜூசில் மயக்க மருந்து கொடுத்து இந்த கொடூரத்தை செய்தனர்.

இதுகுறித்து முதலில் எம்எல்ஏ சரவணனிடம் தான் முறையிட்டேன். ஆனால் அவர் என்னை புகார் அளிக்க வேண்டாம் என்று தடுத்து மிரட்டினார். எனினும் நான் சென்னை தலைமைச் செயலகத்திலும், ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தேன். மகளிர் போலீஸ் நிலையத்தில் நான் அளித்த புகாரில் எம்எல்ஏ பெயரையும் சேர்த்து இருந்தேன். ஆனால் இன்ஸ்பெக்டர் அந்தப் பெயரை புகாரில் இருந்து நீக்கிவிட்டார்.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் விஜய்யின் தீவிர ரசிகையாகவும் தவெக நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தேன். இந்த சம்பவத்திற்கு பிறகு என்னையும், குற்றவாளி பாலாவையும் கட்சியில் இருந்து நீக்கி விட்டனர். குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்த எம்எல்ஏ சரவணனை மட்டும் கட்சியில் இருந்து ஏன் நீக்கவில்லை. குற்றவாளி பாலாவின் மனைவி என் மீது தவறான பண மோசடி புகார்களை கூறி போலியான ஆடியோ மற்றும் வீடியோக்களை பரப்பி வருகிறார்.

எனது தம்பியுடன் வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை இணைத்து அவதூறு பரப்புகின்றனர். இதனால் எனது வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. எனது மகனால் பள்ளிக்கு கூட செல்ல முடியவில்லை. வெளியே செல்ல முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். எனவே குற்றவாளிகள் மீதும், அவர்களை பாதுகாக்கும் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீதும் போலீசார் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளேன்’’ என்றார்.

Related Stories: