12வது சிவாலய ஸ்தலம் நட்டாலம் சங்கரநாராயணர் கோயில் ரூ.1.06 கோடியில் புனரமைப்பு: 3 மாதத்தில் பணி முடிக்க முடிவு

 

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் 12வது சிவாலய ஓட்டஸ்தலமான நட்டாலம் சங்கரநாராயணர் கோயில் ரூ.1.06 கோடியில் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை 3 மாதத்தில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் வருடம் தோறும் மாசிமாத சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் பிரசித்தி பெற்றது. இந்த ஓட்டத்தில் நட்டாலம் சங்கரநாராயணர் கோயில் 12வது கோயிலாக உள்ளது. இந்த கோயில் நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள நட்டாலத்தில் அமைந்துள்ளது. சிவலாய ஓட்டத்தில் உள்ள 12 கோயில்களில் 11 கோயில்களில் மகாதேவர் அருள்பாலித்து வருகிறார். ஆனால் நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் சிவன், விஷ்ணு இருவரும் அருள்பாலித்து வருகிறார்கள்.

இதனால் சிவாலயம் ஓடும் பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற நாமத்தை சொல்லிக்கொண்டே ஓடுவார்கள். இந்த கோயிலின் எதிரே குளம் உள்ளது. கோயிலின் முன்பகுதியில் பலிபீடம் உள்ளது. முன்வாசலைத் தாண்டி தெற்கு வடக்காக நீண்ட ஓட்டு கட்டிடம் உள்ளது. இந்த ஓட்டு கட்டிடம் கேரள கட்டிடக்கலையை பரைசாற்றி அமைந்துள்ளது. கோயில் கடந்த 1999ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதன்பிறகு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. கோயில் பழுதடைந்து காட்சி அளித்தது. ஆகவே புனரமைப்பு செய்து, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி தமிழக அரசு, பழமைமாறாமல் திருப்பணி வேலைகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த 2023-2024ல் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில் நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலை தொல்லியல் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு, மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழுக்களால் ஒப்புதல் பெறப்பட்டு ரூ.1 கோடியே 6 லட்சம் செலவில் புனரமைப்பு செய்ய மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து புனரமைப்பு பணி கடந்த 9.6.2025 தொடங்கியது. கோயிலில் கற்களான சுவர்கள் பழமை மாறாமல் பணிகள் செய்யப்பட்டுள்ளது. சிமெண்டிற்கு பதிலாக கருப்புகட்டி, கடுக்காய், சுண்ணாம்பு கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை தவிர மரவேலைபாடுகளில் சேதமான மரபலகைகள் அகற்றப்பட்டு புதிதாக போடப்பட்டுள்ளது. புதிதாக போட்டுள்ள அனைத்து மரபலகைகளும் தேக்கால் ஆனவையாகும். தற்போது அனைத்து பணிகளும் முடியும் தருவாயில் முழுவீச்சில் வேகமாக நடந்து வருகிறது.

தற்போது பலிபீடம் மற்றும் ஒரு சில பணிகள் மட்டுமே நடக்கவேண்டியுள்ளது. இந்த பணிகள் 3 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் சுசீந்திரம் நிர்வாகத்திற்குட்பட்ட நட்டாலம் சங்கரநாராயணர் கோயில் 12வது சிவாலய கோயில் ஆகும். இந்த கோயிலில் தினமும் இரு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்பட்டு வருகிறது.

கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு பழமை மாறாமல் புனரமைப்பு செய்ய முடிவு செய்து புனரமைப்பு பணி கடந்த வருடம் ஜூன் 6ம் தேதி தொடங்கியது. புனரமைப்பு பணிகள் இந்த வருடம் டிசம்பர் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கு காரணம் கோயில் ஓட்டுப்பணி மற்றும் மரவேலை பாடுகள் அதிகமாக இருந்ததால் 18 மாதகாலம் கொடுக்கப்பட்டது. மரவேலைபாடுகளில் பல மரப்பலகைகள் சேதமாகி இருந்தது. இதனை மாற்றும்பணி நடந்து முடிந்துள்ளது. இந்த பணிகளை கேரள மாநிலத்தை சேர்ந்த மரவேலை செய்யும் தொழிலாளிகள் பழமைமாறாமல் செய்துள்ளனர். கோயில் புனரமைப்பு பணிகளை முடிக்க இன்னும் 6 மாதகாலம் உள்ளது. இருப்பினும் இன்னும் 3 மாதங்களில் பணியை முடித்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பங்குனி திருவிழா
இந்த கோயிலில் சிவராத்திரி சிவாலய ஓட்டம் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மாசி சிவராத்திரி அன்று 24 மணி நேரம் கோயில் திறந்து இருக்கும். இதனை தவிர பங்குனி மாத திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவில் முக்கியமாக 10வது நாள் கோயிலின் முன்புள்ள பெரிய குளத்தில் ஆராட்டு விழா மிகவும் விமர்சையாக நடக்கும்.

Related Stories: