திருவனந்தபுரம்: கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த வருடம் மே இறுதி வாரத்திலேயே பருவமழைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கின. கடந்த 1 வாரத்திற்கு மேலாக கேரளம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும் கேரளம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் இங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பும் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்பதால் கேரளம் மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
