திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல வாரங்களாக நெல் மூட்டைகள் தேக்கமடைந்து உள்ளதால், செய்வதறியாமல் தவிப்பிற்கு ஆளாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்யாறு மற்றும் வெம்பாக்கம் பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் அறுவடை செய்த நெல் மூட்டைகள் கடந்த இரு மாதங்களாக கொள்முதல் செய்யப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் நிலையத்திலே தேக்கமடைந்துள்ளன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புதிதாக நெல் கொள்முதல் செய்ய போதிய இட வசதி இல்லாததால் நெல் மூட்டைகளை வாங்க மறுப்பு தெரிவிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 5 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விரைந்து கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
