சென்னை: பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை ரத்து செய்யாவிட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று காங்கிரஸ் வழக்கறிஞர் அணி முடிவு செய்துள்ளதாக இணை தலைவர் எஸ்.கே.நவாஸ் கூறினார். தமிழக காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இணை தலைவர் எஸ்.கே.நவாஸ் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் குற்றவாளி என்று தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற போதும் அவர் குற்றவாளி என்று உறுதி செய்து மரண தண்டனையை உறுதி செய்தது. கருணை அடிப்படையில் அவரது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட அவர் தற்போது தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துள்ளார். இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறது. நீதித்துறையும், பார் கவுன்சிலும் இதனை விசாரித்து உடனடியாக அவரது பதிவை ரத்து செய்ய வேண்டும்.
முன்னாள் பிரதமரை கொலை செய்த ஒரு குற்றவாளியை வழக்கறிஞராக பதிவு செய்தது மிகப்பெரிய தவறு. பதிவு செய்வதற்கு முன்பு பார் கவுன்சில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டு இருக்க வேண்டும். ஒரு கொலை குற்றவாளியை வழக்கறிஞராக பதிவு செய்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. பார் கவுன்சில் இதனை பரிசீலனை செய்து முடிவெடுப்பார்கள் என நம்புகின்றோம்.
உலக நாடுகளில் பிரதமரை கொலை செய்த குற்றவாளியை வழக்கறிஞராக பதிவு செய்ததை இந்தியாவிற்கு ஏற்பட்ட தலைகுனிவாக பார்க்கின்றோம். உடனடியாக பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை ரத்து செய்யாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் அணி முடிவு செய்துள்ளது. தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து அவர் பிரதமர் படுகொலையில் ஈடுபட்டு இருக்கிறார். பேரறிவாளன் நிரபராதி என்று எந்த நீதிமன்றமும் உறுதிப்படுத்தவில்லை.
இவர் தண்டனை குற்றவாளி என்றுதான் உறுதிப்படுத்தி உள்ளது. வழக்கறிஞர் பதிவை ரத்து செய்ய சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம். உலக நாடுகளில் தவறான எடுத்துக்காட்டிற்கு இது ஒரு உதாரணம். இதற்கு தமிழ்நாடு முன் மாநிலமாக ஆகிவிடக் கூடாது.
அரசாங்கத்தினுடைய பார்வைக்கு கொண்டு சென்று அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில் பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்தது குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் எங்களது வழக்கில் நாங்கள் முறையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
