மதுரை: மதுரை பறக்கும் பாலத்தில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் திண்டுக்கல், மதுரையை சேர்ந்த 3 பேர் பலியாயினர். ஒருவர் படுகாயமடைந்தார். திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை சேர்ந்தவர்கள் மகேஸ்வரன் மகன் விஸ்வா(21), முகம்மது ஹனிபா மகன் சல்மான்கான்(21) மற்றும் விக்னேஷ்(20). மூவரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுரைக்கு ஒரே டூவீலரில் சித்திரைத் திருவிழா காண வந்தனர். மற்றொரு டூவீலரில் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த தங்கத்துரை மகன் மாதேஷ்(26) மதுரையிலிருந்து சென்று கொண்டிருந்தார். மதுரை-நத்தம் மேம்பாலத்தில் திருப்பாலை அருகே ஒருவழிப்பாதையில் எதிரெதிரே வந்த இரு டூவீலர்களும் திடீரென பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் வீசி எறியப்பட்டதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் சம்பவ இடத்தில் விஸ்வா, சல்மான்கான், மாதேஷ் ஆகிய 3 பேர் பலியாகினர். படுகாயத்துடன் விக்னேஷ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மதுரை தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
