சென்னை: எம்.பி.பி.எஸ். மற்றும் பிற மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் 22 லட்சத்து 79 ஆயிரத்து 743 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் மாணவர்கள் 9 லட்சத்து 46 ஆயிரத்து 815 பேர், மாணவிகள் 13 லட்சத்து 32 ஆயிரத்து 928 பேர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ளது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். தலா 4 மதிப்ெபண்கள் வீதம், 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம் பெறும்.
