மதுரை, ஏப். 29: மதுரை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச முறையில் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, கடந்த ஏப்.25ல் தீர்ப்பாய வளாகத்தில் சிறப்பு லோக் அதாலத் நடைபெற்றது. மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் இந்த வழக்குகளை விசாரித்தனர்.
இந்த முகாமில் 68 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் கடன் பெற்றவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 8 வழக்குகளுக்கு சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டது. இந்த 8 வழக்குகளில் கடன் பெற்றவர்கள், வங்கி விதிமுறைகளின்படி மொத்தம் ரூ.1.58 கோடி தொகையை வங்கிகளுக்குச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
