நர்மதாபுரம்: மத்திய பிரதேசத்தில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவத்தில் மருத்துவமனை உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம், நர்மதாபுரம் மாவட்டம், பிப்பரியா என்ற இடத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள ஆபரஷேன் அறை உதவியாளர் பர்சதி லால் மஞ்சி என்பவர் சிங்கம்னா கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு மார்பக கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையை அவர் செய்துள்ளார். சம்பவத்தன்று மருத்துவமனை டாக்டரான சவும்யா ரகுவன்ஷி இல்லாத நிலையில், அவர் இதை செய்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் வட்டார மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்தார். அவர் அந்த புகாரை மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைத்தார். இதை விசாரித்த மாவட்ட மருத்துவ அதிகாரி நர்சிங் கெஹ்லோட் பர்சதி லால் மஞ்சியை சஸ்பெண்ட் செய்துள்ளார். குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சை நடந்தது பற்றி வட்டார மருத்துவ அதிகாரி மற்றும் இதர அதிகாரிகளுக்கு இது தெரியாது என்று கூறப்படுகிறது.
