திருவண்ணாமலை, ஏப்.18: வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் விபரங்களை பொருத்தும் பணியை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு அந்தந்த தொகுதி தாலுகா அலுவலக ‘ஸ்ட்ராங் ரூமில்’ வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில், 156 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். செங்கம், செய்யாறு, வந்தவாசி, போளூர் ஆகிய நான்கு தொகுதிகளில் தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், ஆரணி, கலசபாக்கம் தொகுதிகளில் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சட்டமன்ற தொகுதிவாரியாக அனுப்பி வைத்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் விபரம் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணி நேற்று 8 தொகுதிகளிலும் நடந்தது.
சம்மந்தப்பட்ட தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்பார்வையில், பயிற்சி பெற்ற மண்டல அலுவலர்கள் மற்றும் பெல் நிறுவன பொறியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விபரம் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை, கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த பணியை பார்வையிட்ட கலெக்டர், இப்பணியை முறையாக செய்து, மீண்டும் ஸ்ட்ராங் ரூமில் மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று இப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, டிஆர்ஓ ராம்பிரதீபன் மற்றும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
