பள்ளி ஆசிரியர்களுக்கான மாற்றுப்பணி ஆணை ரத்து தொடக்கக் கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு

வேலூர், ஏப்.18: தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப்பணி ஆணைகளை ரத்து செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (ெதாடக்கக்கல்வி) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2025-2026ம் கல்வியாண்டில், ஆசிரியர்களின் பல்வேறு தனிப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, நிர்வாகக் காரணங்களுக்காகவும் மாணவர்களின் நலன் கருதியும் சில மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கு ‘மாற்றுப் பணி’ (டெபுடேஷன்) வழங்கப்பட்டது. தற்போது 2025-2026ம் கல்வியாண்டு நிறைவடையும் நிலையில், மாற்றுப் பணியில் இருக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அந்தந்தப் பள்ளியின் கடைசி வேலை நாளன்று பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். மாற்றுப் பணியில் இருந்த ஆசிரியர்கள், கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2026 (2026-2027ம் கல்வியாண்டு) முதல் மீண்டும் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியிலேயே பணியை தொடர வேண்டும். அதற்கேற்ப மாற்றுப்பணியில் உள்ள ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். அத்துடன், இவ்விஷயத்தில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் செயல்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: