புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) 24 மணி நேர பாதுகாப்பு வழங்குவதற்காக டெண்டர் கோரியுள்ளது. தலைமையகம், மண்டல அலுவலகங்கள், சேமிப்பு நிலையங்களில் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்கு ரூ.7.5கோடி மதிப்பிலான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
டெண்டர் ஆவணத்தின்படி என்டிஏவின் பணியாளர்கள், பார்வையாளர்கள், சொத்துக்கள், வளாகம், ஆவணங்கள், ரகசியத் தேர்வுப்பொருட்கள், சர்வர் அறைகள், பாதுகாப்பு அறைகள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புக்களை பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். கடந்த மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்ட முன்மொழிவுக்கான கோரிக்கையில் மாற்றங்கள் ஏதுமின்றி 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.7.5கோடி மற்றும் அதனுடன் ஜிஎஸ்டியும் குறிப்பிடப்பட்டுள்ளது. வருகின்ற 17ம் தேதி வரை டெண்டர்களை சமர்ப்பிக்கலாம்.
