திமுக ஆட்சியில் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது!

தஞ்சை: கடந்த திமுக ஆட்சியில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் நரியம்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பட்டுக்கோட்டையில் பல ஆண்டு காலமாக இயங்கிவந்த பழைய பேருந்து நிலையம் இட நெருக்கடி காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

இந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்த அன்றைய திமுக அரசு பட்டுக்கோட்டை நகராட்சி நரியம்பாளையம் பகுதியில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது. அதனைத் தொடர்ந்து அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அப்போதைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று முதல் புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 50 பேருந்துகள் வந்து நிற்க வசதி கொண்ட அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 120 கடைகள் கட்டப்பட்டுள்ளது. பயணிகள், பொதுமக்கள் பயன்படுத்தப்படும் வகையில் கட்டணக் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்கள்போல் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையின் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு இந்த பேருந்து நிலையத்தை தாராளமான இட வசதியோடு, அதிநவீன கட்டுப்பாட்டு வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை, நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். இது குறித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் கூறுகையில், இந்த புதிய பேருந்து நிலையம் பெருநகர பேருந்து நிலையங்களுக்கு இணையாக உள்ளது.

அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. பட்டுக்கோட்டையில் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு தாராளமான இட வசதியோடு, அதிநவீன கட்டுப்பாட்டு வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Stories: