சென்னை: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆடிப்பெருக்கு தினத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய சொத்து வாங்குதல், விற்பனை செய்தல், குடும்ப பாகப்பிரிவினை, தானப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
இதனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் முன்பதிவு டோக்கன்களுக்கு கடும் தட்டுப் பாடு ஏற்பட்டு பலர் ஏமாற்றத்துடனும் மனவேதனையுடனும் திரும்பி செல்லும் நிலை உருவாகிறது. இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு பதிவுத்துறை சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வழக்கத்தைவிட கணிசமான அளவில் கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்கவேண்டும். அதிகப்படியான கூட்டநெரிசலை சமாளிக்க கூடுதல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். சர்வர், இணையதள சேவை மற்றும் தொழில்நுட்ப வசதி தடையின்றி செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
குடிநீர், இருக்கை, நிழற்பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே, ஆடிப்பெருக்கு நன்னாளில் பொதுமக்கள் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றமடையாத வகையில் பதிவுத்துறை சிறப்பு ஏற்பாடு மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
