காவிரி & மேகதாது விவகாரம் – இப்ப கூட அமைதியா இருந்தா எப்படி.? முதல்வர் விஜய் மீது கடும் விமர்சனம்

சென்னை: மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என செயல்படும் கர்நாடக அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். காவிரி விவகாரம் மற்றும் மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக முதலமைச்சருடன், முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும், தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்றும் பிடிவாதமாக கூறி வருகிறது. இத்தகையச் சூழலிலும் தமிழக முதலமைச்சர் விஜய் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் மௌனமாக இருப்பது ஏன்..? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்

காவிரி நீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்ற உத்தரவுகளை கர்நாடகா அரசு ஒருபோதும் மதிப்பதில்லை, மீண்டும் மீண்டும் இந்த விவகாரத்தில் அம்மாநிலம் பிரச்சனை தான் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நமக்கு தேவையான தண்ணீரை பெற கர்நாடக மாநிலத்திடம் போராட வேண்டியிருக்கிறது, பெரும்பாலான நேரங்களில் போராடித்தான் தண்ணீர் பெற வேண்டியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகத்தின் திட்டப்படி மேகதாதுவில் அணை கட்டப்பட்டு விட்டால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், 2 மாநிலங்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுதாக பழனிசாமி சாடியுள்ளார். மேலும் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால், பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்தி உள்ளார். விவசாயிகளின் பயிர்க்கடனை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிடில், அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

Related Stories: