பென்னாகரம், ஜூலை 29: கடந்த ஒரு வருடமாக குடியிருப்பு பகுதியில் தேங்கிக்கிடக்கும் சாக்கடை கழிவுநீரை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கழிவுநீரை கொட்டிய பொதுமக்கள், நூதன முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பருவதனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட கள்ளிபுரம் மேற்கு பகுதியில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதியில், கடந்த ஓராண்டாக சாக்கடை கால்வாயை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லை அதிகரித்ததுடன், தொற்றுநோய் பரவும் இடமாக மாறியது. குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு, கால்வாயை விட்டு வெளியேறிய சாக்கடை கழிவுநீர் பாதைகளை மறித்து தேங்கியுள்ளது.
சாக்கடை கால்வாயை முறையாக பராமரிக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கள்ளிபுரம் மேற்கு பகுதி மக்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று, பென்னாகரம் வட்டார வளர்சி அலுவலகம் முன் திரண்டனர். திடீரென சாக்கடை கால்வாயில் தேங்கியிருந்த கழிவுநீரை வாளிகளில் அள்ளிவந்து, அலுவலகம் முன் கொட்டியதுடன், நூதன முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
