சென்னை: தமிழக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: காவிரி விவகாரத்தில் அமைதியாக இருக்கும் தமிழக முதல்வர். காரணம் என்ன?. ஜனநாயகன் திரைப்படம் கர்நாடகாவில் வெளிவர வேண்டும், வசூலில் எந்தவித சிக்கலும் இருக்கக் கூடாது என்று பொறுமையாக இருக்கிறாரா முதல்வர்?. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்திருக்க வேண்டும்.
ஆனால், இதுவரை 3 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. குறைந்தபட்சம், தமிழ்நாட்டு முதல்வர் நமக்குரிய நீர் பங்கீட்டையாவது உறுதி செய்திருக்க வேண்டாமா?. முதல்வர் நினைத்தால், ஒரு தொலைபேசி அழைப்பில், கர்நாடக காங்கிரஸ் அரசிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை எடுத்துச் சொல்லி சுமூக தீர்வு காண முடியும். கர்நாடக காங்கிரஸ் அரசு உங்கள் நட்பு சக்தி தானே. ஆனால், தன் சுயநலனுக்காக தமிழ்நாட்டின் வாழ்வாதார விவகாரத்தில் பொறுமை காப்பது நியாயமல்ல. தன்னை நம்பி வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு செய்கின்ற வரலாற்று துரோகம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
