‘கடி வாங்கியும் பின் வாங்கவில்லை’ விஷப்பாம்பை கொன்று உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றிய நாய்

*கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை

திருமலை : காக்கிநாடாவில் விஷப்பாம்பிடம் சண்டையிட்டு உரிமையாளர் குடும்பத்தை வளர்ப்பு நாய் காப்பாற்றியது. ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பித்தாபுரம் தொகுதியில் உள்ள கோத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் உள்ளி ஸ்ரீனிவாஸ். இவர் ‘பாக்ஸர்’ இன நாயை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி மதியம், ஸ்ரீனிவாஸின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு காலி இடத்திலிருந்து ஒரு பெரிய நாகப்பாம்பு திடீரென வீட்டிற்குள் நுழைந்தது. பாம்பு சீறிக்கொண்டு கடிக்க முயன்றதை கண்ட ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் மிகுந்த பீதியடைந்து கூச்சலிட்டனர். குடும்பத்தினரின் அலறல் சத்தத்தைக் கேட்டதும், செல்ல நாய் உடனடியாக உஷாரானது.

உரிமையாளரின் குடும்பத்திற்கு வரவிருந்த ஆபத்தை உணர்ந்த அது, வாசலுக்கு முன்பாகவே பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்க முயன்றது. அப்போது, பாம்புக்கும் நாய்க்கும் இடையே சிறிது நேரம் சண்டை நடந்தது. பாம்பு படமெடுத்து ஆடியபடி நாயின் முகவாயில் பலமாகக் கடித்தது.

பாம்பு கடித்த பிறகும் நாய் பின்வாங்கவில்லை. அது தன் வாயால் பாம்பை பலமாகக் கடித்து, தரையில் அடித்து, அங்கேயே கொன்றது. இருப்பினும் விஷப்பாம்பு கடித்ததால் நாய் சோர்வானது.

உடனே உரிமையாளர் ஸ்ரீனிவாசும், அவரது சகோதரர் சுரேஷூம் சிகிச்சைக்காக காக்கிநாடாவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தங்கள் உயிரைக் காப்பாற்றிய அந்த செல்ல நாய் விரைவில் குணமடைய அதன் உரிமையாளரின் குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். உள்ளூர் மக்களும், உரிமையாளர்கள் உயிரைக் காப்பாற்றிய நாயைப் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: