பெங்களூரு: சமூக ஆர்வலர் வாங்சுக்கின் அமைதியான ஜனநாயகப் போராட்டத்தை ஒன்றிய அரசு ஒடுக்கியுள்ள சூழலில் தனது பிறந்தநாளைக் கொண்டாடப் போவதில்லை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 84வது பிறந்தநாள் இது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்;
நேற்று, அமைதியான ஜனநாயகப் போராட்டத்தை அரசு ஒடுக்கியதையும், தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டதையும் நாடு கண்டது. நீதி கோரிய மாணவர்களின் குரல்களுக்குப் பதில்கள் கிடைப்பதற்குப் பதிலாக வன்முறைதான் கிடைத்தது. ‘ஜனநாயகத்தின் தாய்’ என்று போற்றப்படும் ஒரு நாடு, தனது இளம் பிள்ளைகளை இப்படி நடத்தக்கூடாது.
இத்தகைய வேதனையான சூழலில், இன்று எனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன். எனக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பு எனக்கு மிகவும் முக்கியமானது; உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். ஆனால் இன்று கொண்டாட்டத்திற்கான நாள் அல்ல. இது பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்கான நாள்; ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான நாள். நீதி கோரிய மாணவர்கள் மீது ஏன் கொடூரமான தடியடியும், கண்ணீர்ப்புகை வீச்சும் நடத்தப்பட்டன என்று அவர் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இணையச் சேவை ஏன் துண்டிக்கப்பட்டது? மீண்டும் மீண்டும் நடைபெறும் வினாத்தாள் கசிவுகள் மற்றும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதத்தை அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்த விவகாரத்திற்கு தார்மீக மற்றும் அரசியல் ரீதியாகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். பாதுகாப்பான டிஜிட்டல் வினா வங்கி மற்றும் சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வினாத்தாள்களைக் கொண்ட, 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற மாணவர்-மையத் தேர்வு முறை உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் தலையீடு இல்லாத, கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட, சுதந்திரமான மற்றும் தகுதி அடிப்படையிலான கல்வி முறை தேவை. தேர்வு முறைகேடுகள் நிகழும்போதெல்லாம் கட்டாய மறுதேர்வு மற்றும் இழப்பீடு வழங்குவதன் மூலம் மாணவர்களுக்குச் சட்டப்பூர்வப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நமது பிள்ளைகளுக்குத் தேவை நீதிதான், ஒடுக்குமுறை அல்ல. இவ்வாறு பதிவிட்டுள்ளார்
