குவாரிக்கு செல்லும் லாரிகளால் சேதம்: ஆனைக்குன்னம்-இராஜாம்பாளையம் சாலையை சீரமைக்க வேண்டுகோள்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே ஆனைக்குன்னம் ஊராட்சியில் 2 கல்குவாரிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள இராஜாம்பாளையம் கிராமத்தில் ஒரு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. குவாரிகளுக்கு தினந்தோறும் ஏராளமான கனரக லாரிகள் வந்து செல்வதால் ஆனைக்குன்னம் ஊரகச் சாலை முழுவதும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பைக், கார்களில் செல்கின்றவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்கின்ற மாணவர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் பாதித்து வருகின்றனர்.

இந்த சாலையை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எழுப்பாக்கம், மணிமங்கலம், அம்மணம்பாக்கம், பாதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை உடனடியாக சீரமைக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ‘’போர்க்கால அடிப்படையில் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும்’’ என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: