கடலூர்: கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மஞ்சக்குப்பம்-பெண்ணையாறு சாலையில் உள்ளது. அந்த அலுவலகத்தின் பின்புறம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் முடிகளை அதிகளவில் வளர்த்து ‘‘புள்ளிங்கோ’’ என்று அழைக்கக்கூடிய வகையில் இருந்து வந்தனர். இதையடுத்து அந்த மாணவர்களுக்கு முடியை சரி செய்ய தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் முடிவெடுத்தனர்.
அதன்படி நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தாமரை செல்வி தலைமையில் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் முடிகளை, முடி வெட்டுபவர்களை வைத்து சரி செய்தனர். ஒழுக்கமான முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என பலமுறை மாணவர்களுக்கு அறிவுறுத்தியும் கேட்காத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. புள்ளிங்கோ மாணவர்களுக்கு பள்ளியிலேயே முடி வெட்டிய ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையை பொதுமக்கள் பாராட்டினர்.
