நாமக்கல், ஜூலை 13: பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கூட்டுறவு சங்கங்கள் முன்பு விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்ய விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. நாமக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், நாமக்கல் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்கள் முழுமையையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தள்ளுபடி கோரி விவசாயிகள் போராடி வரும் நிலையில், கூட்டுறவு சங்க அதிகாரிகள் பயிர் கடன் நிலுவை தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என விவசாயிகளை நிர்பந்தம் செய்கின்றனர். இதை தடுக்க கோரி மாவட்டம் முழுவதும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் முன்பு விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தின் மாநில துணை செயலாளர் இந்திரஜித், மாவட்ட செயலாளர் செல்வராஜூ, துணை தலைவர் காத்தவராயன், துணைச்செயலாளர் செல்வம் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
