நாமகிரிப்பேட்டை, ஜூலை 3: வெண்ணந்தூர் ஒன்றியம், அக்கரைப்பட்டியில் முனியப்பன் கோயிலுக்கு சொந்தமான 2.83 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில், அதிகாரிகள் மீட்டனர். வெண்ணந்தூர் ஒன்றியம், அக்கரைப்பட்டி ஊராட்சியில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 2.83 ஏக்கர் நிலம், 5 நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, கடந்த ஜூன் 25ம் தேதி, நாமக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில், கோயில் தக்கார் மற்றும் ஆய்வாளர் ஞானேஸ்வரன், செயல் அலுவலர் சரண்யா, துறை தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்), துணை ஆட்சியர் (ஆலய நிலங்கள் ஓய்வு), அறநிலையத்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, 2.83 ஏக்கர் கோயில் நிலம் அதிகாரப்பூர்வமாக அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளதை, பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.
