புழல் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக மாறிய சர்வீஸ் சாலை : வாகன ஓட்டிகள் அவதி

புழல்: செங்குன்றம் சாமியார் மடத்திலிருந்து சென்னை-புழல் நோக்கி செல்லும் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் பல இடங்களில் சாலை பழுதடைந்துள்ளது. குறிப்பாக, இச்சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால், நள்ளிரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், நிலைத்தடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தும், பெரிதும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.

குறிப்பாக, புழல் அடுத்த தண்டல் கழனி, புழல் மத்திய சிறைச்சாலை எதிரே சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்தும், சர்வீஸ் சாலைகளில் மின்விளக்குகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்; `புழல் அம்பேத்கர் சிலை சிக்னல், சிறைச்சாலை சிக்னல், காவாங்கரை சிக்னல் ஆகிய பகுதிகளில் வாகனங்களில் சாலையை கடந்து செல்லும்போதும், பொதுமக்கள் நடந்து செல்லும்போதும், பல நேரங்களில் சிக்னல்களை மீறி செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துக்கள் அதிகரிக்கிறது.

எனவே, மேற்கண்ட மூன்று இடங்களிலும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் நின்று, போக்குவரத்து சரி செய்தால் எந்தவித விபத்தும் நடக்காமல் இருக்கும். அதற்கு மாதவரம் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: