புழல்: செங்குன்றம் அண்ணா சிலை அருகே ரூ.15.90 லட்சத்தில் பேருந்து நிழற்குடை பணி மந்தகதியில் நடைபெற்று வருவதால், அப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம் புறநகர் – பாடியநல்லூர் நோக்கி செல்லும் திசையில் பேருந்து நிறுத்தம், செங்குன்றம் அண்ணா சிலை அருகில் உள்ளது. இங்கு, நிழற்குடைகள் இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பேருந்து பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ – மாணவிகள், பொதுமக்கள் பலர் சிரமப்பட்டு, நீண்ட நேரம் காத்திருந்து பேருந்தில் சென்று வருகின்றனர்.
குறிப்பாக தாமரைப்பாக்கம், திருவள்ளூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், பேருந்து பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர் என தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக, செங்குன்றம் பேரூராட்சி சார்பில், பொது நிதியிலிருந்து ரூ.15.90 லட்சம் மதிப்பீட்டில் 48 மீட்டர் தூரத்தில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் காரணமாக பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால், செங்குன்றம் காவல் நிலையத்திலிருந்து அண்ணா சிலை வரை கடந்து செல்வதற்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிழற்குடை விரைந்து கட்டி முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பேருந்து பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
