நிர்மலா சீதாராமன் பெயரை கூறி மருத்துவரிடம் ரூ.86 லட்சம் ‘அபேஸ்’

 

திருமலை: ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர், சமூகஊடகங்களில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் வந்த பங்கு சந்தை முதலீடு தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். இதில் முதலீடு செய்வதற்காக அந்த விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் அந்த எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலம் மருத்துவரை தொடர்பு கொண்ட நபர்கள், ஆன்லைன் முதலீட்டில் பெரும் லாபம் ஈட்டலாம் என்று கூறி மருத்துவரை நம்ப வைத்துள்ளனர். மேலும் மருத்துவரின் பெயரில் ஒரு பங்குசந்தை முதலீட்டிற்கான கணக்கை தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து பதிவு கட்டணம், வர்த்தக கட்டணம், அனுமதிகள் மற்றும் வரிகள் என்ற பெயரில் மருத்துவரிடமிருந்து தவணை முறையில் ரூ.86.44 லட்சம் வசூலித்தனர்.பின்னர் மருத்துவர் செய்துள்ள முதலீட்டிலிருந்து பெரும் லாபம் கிடைத்துள்ளதாக சில வர்த்தம் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்களையும், செய்திகளையும் அவருக்கு அனுப்பி வந்துள்ளனர். இந்நிலையில் தனது பங்குசந்தை கணக்கில் லாபம் நல்ல நிலையில் இருந்ததால், மருத்துவர் பணத்தை எடுக்க முயன்றார். இருப்பினும், பணத்தை விடுவிக்க மேலும் பணம் செலுத்துமாறு அந்த நபர்கள் வற்புறுத்த தொடங்கியுள்ளனர்.

பல நாட்களாக போராடியும் பணத்தை எடுக்க முடியவில்லையாம். போலியாக பங்குசந்தை கணக்குகளை தொடங்கி, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மருத்துவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மருத்துவர் ஐதராபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: