சென்னை: குதிரை பேரம் உண்மையாய் இருந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுகவை முழுமையாக கைப்பற்றுவோம், 90 சதவீதம் நிர்வாகிகள் எங்கள் பக்கம் வர போறாங்கன்னு சொல்லி ஆதவ் அர்ஜுனா பேசியதிற்கு இதுவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே கருத்து சொல்லவில்லை. குதிரை பேரம் உண்மையாய் இருந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு அந்த அதிகாரம் இருந்தால் அவர் அதில் உடனடியாக தலையிட வேண்டும்.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே தேசம் ஒரே தேர்தல் என்கிற நிலையை, அதற்கான சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே அதனை நாம் ‘டிலிமிட்டேஷன் பில்’ என்கிற பெயரில் கொண்டு வந்தபோது திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அத்தனை பேரும் ஒற்றுமையாக இருந்து அதனை முறியடித்தோம். இப்போதும் அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்வோம். ஆனால், மேற்கு வங்கத்திலே திரிணாமுல் காங்கிரஸிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை 20 பேரை அந்த கட்சியிலிருந்து வெளியேற்றி அரசியல் சூதாட்டம் ஆடுகிற நிலையை பார்க்கிறோம். நாடாளுமன்றத்திற்கு சென்றால்தான் இது குறித்து என்ன நிலை என்பது தெரியவரும் என்றாலும், நாங்கள் இந்த முறையும் அந்த முயற்சியை முறியடிப்பதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
விஜயபாஸ்கர் என்ன காரணத்திற்காக அதிமுகவிலிருந்து வெளியேறினார்? அதிமுகவிலிருந்து ஆட்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது, குதிரை பேரம் நடக்கிறது என்கிற விவாதம் ஒருபுறம் இருக்கிறது என்றாலும் கூட, அதிமுகவுக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி அதிமுக தலைவர்கள் ஏன் வாய் திறக்காமல் இருக்கிறார்கள்? ஆவேசப்பட வேண்டியவர்கள், ஆத்திரப்பட வேண்டியவர்கள், தவெகவுக்கு எதிராக கொந்தளிக்க வேண்டியவர்கள் அமைதி காப்பதன் பொருள் என்ன? ஆளுநரிடம் சென்று மனு கொடுப்பதை ஒரு கடமையாக செய்கிறார்களே தவிர, இதை ஒரு வெகுமக்கள் கருத்தாக மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. ‘எங்கள் கட்சியை சீர்குலைக்க பார்க்கிறார்கள், இதை அனுமதிக்க மாட்டோம்’ என்ற குரலும் எழவில்லை. ‘பொதுமக்களே இது நியாயமா?’ என்று பொதுமக்களிடத்தில் முறையீடும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
