இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த வேண்டும் – ஒன்றிய அரசை வலியுறுத்தும் உமர் அப்துல்லா

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவது பிராந்திய அமைதிக்கு மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார். “நண்பர்களை மாற்றலாம், ஆனால் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது” என்ற மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் புகழ்பெற்ற பொன்மொழியை சுட்டிக்காட்டி இருக்கும் உமர் அப்துல்லா, “இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து இது மேலும் அதிகரித்தது.

இப்போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான வழியை காணுமாறு பிரதமருக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறினார். மேலும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஷோபியானில் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா கூறினார்.

தொடர்ந்து பேசிய உமர் அப்துல்லா சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை ஒன்றோடொன்று பேசி நட்புறவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார். இதுபோன்ற கருத்தை ஆர்எஸ்எஸ் சொல்லும் போது யாரும் ஆட்சேபிப்பதில்லை, ஆனால் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த தலைவர்கள் இதைப் பற்றிப் பேசும்போது மட்டும் எதிர்ப்பு எழுகிறது என்று வருத்தத்தை வெளிப்படுத்தினார். அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்பட வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

 

 

Related Stories: