சென்னை: மாநில நலன்களை பாதிக்கும் விபி-ஜி ராம்-ஜி திட்டம் குறித்து, ஒன்றிய அரசிடம் வலுவான எதிர் நிலைப்பாட்டை தவெக அரசு எடுக்க வேண்டும் என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, மாநிலங்களின் நிதிச் சுமை கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள விபி-ஜி ராம்-ஜி (VB-G RAM-G) திட்டத்தின் மூலம், மாநில அரசுகள் மீது கூடுதல் நிதிப் பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன.
கூட்டாட்சியின் அடிப்படை நோக்கமான ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பொறுப்புகளை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கைக்கு மாறாக, மாநிலங்களின் நிதிப் பங்களிப்பை அதிகரித்திருப்பது மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி மேலாண்மையின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது மாநிலங்களின் நிதிச் சுயாட்சியை மேலும் பலவீனப்படுத்தும். மாநிலங்களின் நிதிச் சுமையைக் கணிசமாக அதிகரிக்கும் இந்தத் திட்டத்தை எந்தவித எதிர்ப்புமின்றி செயல்படுத்த முனைந்தால் தமிழ்நாட்டின் நிதி நலன்களையும் மாநில உரிமைகளையும் பாதுகாக்கத் தவறியதாகவே அமையும். எனவே, மாநிலத்தின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசிடம் வலுவான எதிர் நிலைப்பாட்டை தவெக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
