திருச்சி, ஜூன் 30: குண்டூர் கிராம மக்கள் விரும்பும் தேதியில் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். திருச்சி, திருவெம்பூர் வட்டம், குண்டூரை சேர்ந்த கிராம மக்கள் பொதுமக்கள் குறைதீர் முகாமின்போது அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் செல்லாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பரம்பரையாக உள்ளவர்கள் திருவிழா நடத்தி வருகின்றனர். திருவிழா சமயத்தில் அம்மன் தேர் பட்டயன் கோவில் சென்று குட்டிகுடி நிகழ்வு நடைபெறும். கிராம மக்கள் அனைவரும் கலந்துகொள்ளும் இத்திருவிழாவை தற்போது பரம்பரை முறையாக கொண்டுள்ள சிலர் தங்கள் சொந்த விருப்பப்படி திருவிழாவை நடத்த முயற்சி செய்கின்றனர்.
இதனால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, மக்கள் குறிப்பிட்டவாறு ஜூன் 30ம் தேதி தொடங்கி ஜூலை 9ம் தேதி வரை திருவிழாவை கொண்டாட மாவட்ட வருவாய் அலுவலர் அனுமதி வழங்க வேண்டும், அதோடு செல்லாயி அம்மன் அணிந்துள்ள கோயில் நகை 50 பவுன், கோயில் நிதி ரூ10 லட்சத்தையும் தனிநபர்கள் மக்களிடம் சமர்ப்பிக்க மறுக்கின்றனர். எனவே இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து திருவிழாவை கிராம மக்கள் தெரிவிக்கும் தேதியில் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
