துவரங்குறிச்சி, ஜூலை 1: துவரங்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவா (35) என்பவர் ராமநாதபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி சொந்த வேலையாக அவரது காரில் சென்று கொண்டிருந்தார். காரை சிவா ஓட்டிச் சென்ற நிலையில், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை யாகாபுரம் பிரிவு சாலை அருகே நேற்று வந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
இதில் சிவா பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு துவரங்குறிச்சி தனியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
