திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வாகன நிறுத்துமிடத்தில், டூவீலர் ஒன்று கடந்த சில நாட்களாக கேட்பாரற்று நின்றிருந்தது. விசாரணையில், அந்த வண்டியில் வந்தவர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ. மாதேஷ் (72) என்பதும், இவர், கடந்த மாதம் 28ம் தேதி கோயிலுக்கு டூவீலரை எடுத்துக் கொண்டு திருச்செங்கோடு வந்ததும், கோயிலுக்கு சென்றவர் மீண்டும் வராததும் தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை படிக்கட்டு வழியாக மலைப்பாதையில் பக்தர்கள் ஏறும்போது, 60ம் படி என்னுமிடத்தில் புதருக்குள் எலும்புக் கூடாக ஆண் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த திருச்செங்கோடு டவுன் போலீசார், சடலமாக கிடந்தவர் மாதேஷாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரது மனைவி சுசீலாமணிக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவர் வந்து உடைகள் மற்றும் அரைஞாண் கொடியை பார்த்து விட்டு, இறந்தவர் மாதேஷ் தான் என உறுதி செய்தார். அவர் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
