கோவை: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகுசி.வி.சண்முகம் தலைமையில் செயல்பட்ட அதிமுக எம்எல்ஏக்களின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. இதில் எஸ்.பி.வேலுமணியின் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் அனைவருக்கும் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் எஸ்.பி.வேலுமணிக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு பதிலாக துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பதவி வழங்காததால் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி மீது அதிருப்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கோவை அடுத்த தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புகைப்படம், பேனர் புறக்கணிக்கப்பட்டது. இது குறித்து எஸ்பி வேலுமணியிடம், எப்போதும் கலகலப்பாக இருக்க கூடிய இடம், கட்சி கொடி, பேனர் இல்லாமல் நடத்தப்படுகிறதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அப்படியெல்லாம் இல்லை. தலைவர், அம்மா புகைப்படம் உள்ளது என்று மழுப்பலாக பதில் அளித்தவாறு அங்கிருந்து சென்றார்.
* கேவலப்படுத்துறாங்க…
கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் வேலுமணி பேசுகையில், ‘‘மாவட்ட செயலாளர் பதவி இருந்தால்தான் நம்மால் முன்பு போல் செயல்பட முடியும். 21 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக இருந்திருக்கிறேன். சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து பொதுக்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என கேட்டோம். தற்போது நீங்க என்ன முடிவு சொல்கிறீர்களோ அதனை செய்வேன். வாட்ஸ் அப்பில் குழு உருவாக்கி என்னை கேவலப்படுத்தி வருகின்றனர்’’ என்றார்.
