வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்ட யாதவ மகாசபை தலைவர் கலியுக கண்ணதாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் வன்னியர் சங்கம் நடத்திய இடஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 6 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் மார்பளவு வெண்கல சிலை விழுப்புரம் மாவட்டம் பார்வதிபுரத்தில் மணிமண்டபம் கட்டி அதில் அமைக்கப்பட உள்ளது. இந்த மணிமண்டபத்தை இம்மாத இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்துபோன 21 பேரில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கடமலைபுத்தூர் கிராமத்தை சேர்ந்த மணி மட்டும் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால், இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்துபோனவர் பெயர் பட்டியலில் வன்னியர் என குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு யாதவ மகாசபை வன்மையாக கண்டிக்கிறது. தற்போது நிறுவ இருக்கும் சிலையிலும் கல்வெட்டிலும் மணியின் பெயரை யாதவர் என குறிப்பிடவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

The post வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: