2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம்: பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என்று அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்றும் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஒன்றிய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றெ 2011ல் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், 2011ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில், கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம். அவர்கள் சம்பள உயர்வு மற்றும் ஊக்கத்தொகை பெற தகுதி தேர்வு தேவையில்லை. அதே நேரத்தில் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயமாகும்.

நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதி ரத்து செய்யப்படுகிறது. பதவி உயர்வுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம். 2011 ஜூலை 29ம் தேதிக்கு பிறகு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த உத்தரவு மூலம் தகுதி தேர்வில் வெற்றி பெறாத ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் பணியை தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் தகுதி தேர்வில் வெற்றி பெறாத ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் பணியை தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

The post 2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம்: பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: