தமிழகத்தில் 17ம் தேதி வரை மழை நீடிக்கும்

சென்னை: தமிழகத்தில் 17ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. மேலும், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

அத்துடன் மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 13ம் தேதி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இதே நிலை 17ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

The post தமிழகத்தில் 17ம் தேதி வரை மழை நீடிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: