இலங்கையில் அதானியின் காற்றாலை திட்டங்கள் மறு ஆய்வு :புதிய அரசின் அறிவிப்பால் அதானி குழுமம் அதிர்ச்சி!!

கொழும்பு : அதானி குழுமத்துடனான காற்றாலை மின்சக்தி ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யப்போவதாக இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியனுக்கு (சுமார் ரூ.3,700 கோடி) அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசுடன் அதானி குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் காற்றாலை திட்டங்களுக்காக முந்தைய ரணில் அரசு வழங்கியுள்ள மின்சார கொள்முதலுக்கான ஒப்புதலில் முரண்பாடுகள் இருப்பதாக கூறினார். நவம்பர் 14ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதானி நிறுவனத்துடனான காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க தனது தேர்தல் பரப்புரையின் போது அதானியின் காற்றாலை திட்டம் இலங்கையின் எரிசக்தி இறையாண்மை அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியதுடன், தான் அதிபரானால் அதானி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post இலங்கையில் அதானியின் காற்றாலை திட்டங்கள் மறு ஆய்வு :புதிய அரசின் அறிவிப்பால் அதானி குழுமம் அதிர்ச்சி!! appeared first on Dinakaran.

Related Stories: