சிவகங்கை அருகே யானை சின்னத்துடன் சூலக்கல் கண்டுபிடிப்பு

சிவகங்கை : சிவகங்கை அருகே யானை சின்னத்துடன் கூடிய சூலக்கல்லை தொல்நடைக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.சிவகங்கை அருகே முத்துப்பட்டி பொன்னாகுளம் பகுதியில் சூலக்கல் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தொல்நடை குழு நிறுவனர் காளிராசா தலைமையில் ஆய்வு செய்தனர். பின்னர் காளிராசா கூறுகையில், ‘‘முத்துப்பட்டி பொன்னாகுளம் புதுக்கண்மாயில் யானைச் சின்னம் பொறித்த சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சூலக்கல் கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் எல்லைகளை குறிப்பதற்காக நடப்படும். ஆனால் இங்கு காணப்படுகிற சூலக்கல்லின் கீழே யானை இடம்பெற்றுள்ளது மிகுந்த சிறப்புக்குரியது. இரண்டரை அடி உயரமும், ஒரு அடி அகலமும் உடையதாக சூலக்கல் காணப்படுகிறது. இதில் திரிசூலத்தின் கீழ்பகுதியில் யானை பொறிக்கப்பட்டுள்ளது.

யானைப் படையை உடைய வணிகர்கள் அத்திகோசத்தார் எனப்பட்டனர். பெருவழிகளில் வணிகர்களை பாதுகாப்பதற்காக இவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இங்கு தங்கியிருந்த அத்திகோசத்தார் எனும் யானைப்படையை உடையவர்கள் தானமாக வழங்கிய நிலத்தில் அவர்களின் யானைச் சின்னத்துடன் கூடிய சூலக்கல்லை நட்டு வைத்திருக்கலாம். இக்கல்வெட்டு 17, 18ம் நூற்றாண்டாக கருத முடிகிறது. விசய என்கிற சொல்லை கொண்டு இக்கல்வெட்டு சேதுபதி மன்னர்களுடையதாகவோ அல்லது சிவகங்கையை ஆண்ட மன்னர்களை குறித்த பெயராகவோ இருக்கலாம்’’ என்றார்.

The post சிவகங்கை அருகே யானை சின்னத்துடன் சூலக்கல் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: