மழைக்காலங்களில் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையில் மழை வெள்ளம் தேங்கி கடல் போல் காட்சி அளித்தது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர். மழைநீர் கால்வாய்கள் அமைக்காமல் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக தள்ளிப்போனது. இதை தொடர்ந்து, தற்போது ஆக்கப்பூர்வமான பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்பு சோதனை ஓட்டத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று காலை நடத்தினர். விரைவு, மாநகர, ஆம்னி பேருந்துகள் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக, புதிய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளுக்கும் ஒதுக்கப்பட்ட இடத்தில், அந்தந்த ஊர்களின் பெயர் பலகைகள் முன்பு நிறுத்தப்பட்டன. பேருந்துகள் வந்து வெளியே செல்லும்போது ஏற்படும் இடையூறுகள், நெரிசல், கூடுதல் வசதிகள் குறித்து கண்டக்டர்கள், டிரைவர்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர். இன்றும் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
பேருந்துகள் சோதனை ஓட்டம் நடத்துவதற்காக 25 அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும், 25 மினி ஆம்னி பேருந்துகளும், 25 மாநகர புறநகர் பேருந்துகளும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு நேற்று வந்து நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில், செய்யப்பட வேண்டிய பணிகள் என்ன என்பது குறித்து அதிகாரிகளுடன் சோதனை நடத்த கடந்த 2 மற்றும் 3ம் தேதி திட்டமிட்டு இருந்தோம். ஆனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் மிக்ஜாம் புயலினால் மேற்படி சோதனை ஓட்டம் தள்ளிப்போனது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சோதனை ஓட்டத்தை சிஎம்டிஏ நிர்வாக செயலாளர் அன்சுல்மிஸ்ரா ஆய்வு செய்தார். அப்போது அவருடன் போக்குவரத்து துறை மற்றும் சிஎம்டிஏ நிர்வாக அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.
The post பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறப்பு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் 75 பஸ்களை இயக்கி சோதனை ஓட்டம்: போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு appeared first on Dinakaran.