தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பாலா ‘வணங்கான்’ பெயரை பயன்படுத்த தடை கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ படம் விரைவில் வெளியாகிறது. இந்நிலையில், வணங்கான் என்ற தலைப்பை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, ஆரஞ்சு புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், வணங்கான் தலைப்பை 2020ல் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சங்கத்தில் பதிவு செய்திருந்ததாககூறியுள்ளார்.

இதே பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரி இருந்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் பாலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், வணங்கான் என்ற பெயரில் படம் தயாரிப்பது 2022ம் ஆண்டிலேயே தெரியும் நிலையில், இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்து விட்டு, படம் வெளியாகவுள்ள நிலையில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பட தலைப்புக்கு பதிப்புரிமை சட்டம் பொருந்தாது என்பதால், வணங்கான் பெயரை பயன்படுத்தவும், படத்தை வெளியிட தடை விதிக்கவும் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பாலா ‘வணங்கான்’ பெயரை பயன்படுத்த தடை கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: