×

கொளுத்தும் வெயிலில் இருந்து கால்நடைகளை காப்பது எப்படி? கால்நடைத்துறை விளக்கம்

பரமக்குடி, மார்ச் 6: கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் கால்நடைகள் வெப்ப அயற்சியினால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டுமென கால்நடைத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் உயர் ரக கறவை மாடுகள், எருமைகள் ஆகியன தீவனம் உட்கொள்வது 10 முதல் 15 சதவீதம் குறையும். பால் உற்பத்தியும் 20 முதல் 30 சதவீதம் குறையும். வெயிலில் இருந்து கால்நடைகள் உடலைக் குளிர்வித்துக் கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. வெப்ப அயற்சியினால் பாதிக்கப்பட்ட மாடுகள் நிழலிலேயே இருக்கும். உணவிற்கோ, தண்ணீர் குடிக்கவோ செல்லாது.

அதிகளவில் தண்ணீர் உட்கொள்வதுடன், தீவனம் சாப்பிடும் அளவு குறையும். எப்போதும் நின்று கொண்டே இருக்கும். உடல் வெப்பநிலை அதிகரிப்பால் சுவாசம் குறையும். வாயை திறந்தே சுவாசிக்கும். அதிக அளவிலான உமிழ்நீர் சுரக்கும்.
வெப்ப அயற்சியால் பாதிக்கப்படும் மாடுகள் குணமடைய அதிக காலம் பிடிக்கும். கன்றுகள் ஈனுவதில் சிக்கல் ஏற்படும். பால் உற்பத்தி குறையும். அறிகுறிகள் தென்படும் மாடுகளுக்குத் தேவையான அளவு தண்ணீர், நிழல், காற்றோட்டம் மற்றும் செயற்கை முறையில் குளிர்ச்சி அளிக்க வேண்டும். கால்நடைகள் குடிக்கும் நீரில், பாசிகள் இல்லாமல் சுத்தமான தண்ணீர் வழங்க வேண்டும். மாட்டுக் கொட்டகைகள் கிழக்கு, மேற்காக இருக்க வேண்டும். மரங்கள் அதிக அளவில் இருக்க வேண்டும். கூரை உயரமாக அமைத்துத் தரையிலிருந்து மின்விசிறியை 9 அடி உயரத்தில் அமைக்க வேண்டும்.

பழைய சாக்குகள் கொட்டகையின் மீது பரப்பி தண்ணீர் தெளிக்க வேண்டும். அடர் தீவனத்தின் அளவை அதிகரித்து, தாது உப்பி கலவையை மாடுகளுக்கு அளிக்க வேண்டும். இதனால் மாடுகளை வெப்ப அயற்சி மற்றும் நோய் இல்லாமல் பால் உற்பத்தி குறைவின்றி கிடைக்கும். செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்க்கும் விவசாயிகள் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் வேலைகளில் ஆடுகளை மேய்க்க வேண்டும். ஆடுகளின் மீது தண்ணீர் தெளித்து சுத்தமான குடிநீர் கொடுக்க வேண்டும். ஆட்டுக்கொட்டகைளைச் சுற்றிலும் நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.

இறைச்சி மற்றும் முட்டைக்கோழிப் பண்ணைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மின் விசிறி ஏற்பாடு செய்து, நீரைத் தெளிக்க வசதி செய்ய வேண்டும். வெயில் நேரத்தில் தனிக்கவனம் செலுத்தி கோழிகளைப் பராமரிக்க வேண்டும். செல்லப் பிராணிகளை வீடுகளில் வளர்ப்போர் அவற்றிற்குச் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். நாய்கள், பூனைகள், பறவைகளை நல்ல கவனத்துடன், விரைவில் செறிக்கக் கூடிய உணவை வழங்கிட வேண்டும். அவைகளுக்குத் தகுந்த நேரத்தில் குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசி போட வேண்டும். வெயிலினால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என கால்நடைத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை