×

பரமக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாமல் உயிரிழப்பு அதிகரிப்பு

பரமக்குடி, மார்ச் 5: மாவட்டத்தில் தலைமை மருத்துவமனையை தவிர மற்ற அரசு மருத்துவமனைகளில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பகுதியில் நாளுக்குநாள் விபத்துகள் அதிகரித்து, பல பேர் உயிர் பலி ஆகி வருகின்றனர். விபத்துகளில் காயமடைந்த பலர் பிசியோதெரபி சிகிச்சை பெறமுடியாமல் தனியார் எலும்பு முறிவு மற்றும் பிசியோதெரபிஸ்ட் மையங்களுக்குச் சென்று பணத்தை செலவு செய்து வருகின்றனர். பொருளாதார ரீதியில் வருவாய் உள்ளவர்கள் தனியாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் பொருளாதாரத்தில் குறைவாக உள்ளவர்கள் அரசு மருத்துவமனையை தவிர வேறு எங்கும் செல்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. எலும்பு முறிவு ஆபரேஷன் செய்தவர்கள் உடலுறுப்புகளின் செயல்பாட்டிற்கு பிசியோதெரபி பயிற்சி மிகவும் முக்கியமானதாக உள்ளது. பரமக்குடி அரசுப் பணி மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் தேவையான கருவிகள் இருந்தாலும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் இல்லாததால் பரமக்குடியை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனைகள், நோயாளிகளிடம் பணத்தை பறித்து வருகின்றனர். ஆகையால் பரமக்குடி எம்எல்ஏ, அரசு மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ராஜபாண்டி கூறுகையில், ‘‘பரமகுடி அரசு மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால், விபத்துக்களில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு வந்தும்போது, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பிசியோதெரபி சிகிச்சை கொடுக்க முடியாததால் உயிரிழப்பு சம்பவங்களும், கோமா நிலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது’’ என்றார்.

Tags : doctors ,Paramakudi Government Hospital ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...