பரமக்குடி, பிப். 26: பரமக்குடி பெரிய பஜார் பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பரமக்குடியில் பெரியகடை பஜார் பகுதியிலுள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பரமக்குடி அங்காளபர மேஸ்வரி மற்றும் வாணிக்கருப்பணசாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா பிப்ரவரி 19ம் தேதி காப்புகட்டும் வைபவத்துடன் தொடங்கியது. பிப்ரவரி 21ம் தேதி மஹா சிவராத்திரியும், 23ம் தேதி பாரிவேட்டை வைபவம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை இருபதாம் ஆண்டு பால்குடப் பெருவிழாவில் 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரில் முக்கிய வீதிகளில் வலம்வந்து, அங்காள பரமேஸ்வரிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அங்காள பரமேஸ்வரி மற்றும் பரிகாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜீவானந்தம் தலைமையில் கோயில் பவுர்ணமி வழிபாட்டு குழுவினர், பரமக்குடி வட்ட ஓம்சக்தி வழிபாட்டு மன்ற நிவ்வாகிகள் செய்திருந்தனர்.