×

நிலத்தடி நீர்மட்டம் உயர மீண்டும் மழைநீர் சேகரிப்பு தொட்டி வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா?

தொண்டி, ஜன.23:  அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி தற்போது எவ்வித பயன்பாடும் இல்லாமல் உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர அதிகாரிகள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுததுள்ளனர். கடுமையான வறட்சி மற்றும் தொடர்ந்து மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக கடந்த காலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெற்று கட்டப்பட்ட அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. இதனால் மழை காலங்களில் பெய்யும் மழை தண்ணீர் முழுவதும் நிலத்திற்குள் சென்று நிலத்தடிநீர் மட்டமும் அதிகரித்தது.

காலப்போக்கில் இத்திட்டத்தில் அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தாததால் பொது மக்களும் கவனம் செலுத்த வில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. கடந்த சில நாட்களாக பெய்த மழை தண்ணீர் அனைத்தும் வீணாக கடலுக்கு சென்றது. தொடர்ந்து போதிய மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்து வரும் வேளையில் கிடைக்கும் நீரையும் வீணாக்கும் வகையில் உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமுக ஆர்வலர் சாதிக் பாட்சா கூறியது, பேருராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் அனைத்து அரசு அலுவலகம் மற்றும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாயமாக்கப்பட்ட  போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. சில வருடங்களாக அதில் கவனம் செலுத்தாமல் இருந்ததால், மழைநீர் அனைத்தும் வீணாக கடலில் கலக்கிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுபொருள்கள் நிலத்தின் மேற்பரப்பில் கிடப்பதால் மழைநீர் உள்ளே செல்ல முடியாமல் விரைவில் ஆவியாகி
விடுகிறது. அதனால் மீண்டும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் கவனம் செலுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்றார்.

Tags : rainwater harvesting tank houses ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை