தொண்டி, ஜன. 9: தொண்டி அருகே உள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் தீர்த்த தெப்பக்குளத்தில் துணிகளை துவைப்பதால் அதன் புனிதம் கெடுவதாக புகார் எழுந்தள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் தீர்த்தின் புனிதத்தை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திறக்கு பாத்தியப்பட்டது திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில். விஷக்கடிக்கு தீர்வு கானும் தலமாக இது கருதப்படுகிறது. விஷ ஜந்துக்கள் கடித்ததால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இங்கு பக்தர்கள் தங்கி இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி சென்றால் அனைத்து விதமான நோய்களும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்க்காக தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். இரவு தங்கி காலையில் தீர்த்தத்தில் நீராட சென்றால் அங்கு பெண்கள் துணிகளுக்கு சோப்பு போட்டு துவைத்து கொண்டிருக்கின்றனர். இது கடும் விரதமிருந்து வரும் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்துகிறது.
தீர்த்தத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் நடக்கும் இந்த செயலை கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறையும் கண்டுகொள்ளவில்லை என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் முற்றிலும் வறட்சி நிலவியதால் இந்த தெப்பத்தில் இருந்த தண்ணீரை பயன்படுத்தினர். ஆனால் தற்போது அனைத்து குளம் மற்றும் கண்மாய்களில் தண்ணீர் நிறைந்துள்ளது அதனால் இந்த தீர்த்தத்தில் துணி துவைப்பதை தடுக்க வேண்டும். இது குறித்து பக்தர்கள் கூறியதாவது, புனிதம் மிக்க தீர்த்தமாக நினைத்து நீண்ட தூரத்திலிருந்து வருகிறோம். ஆனால் இங்கு தீர்த்தத்தில் துணிதுவைக்கின்றனர். விஷ கடிகளுக்கு அரு மருந்தாக உள்ள தீர்த்தத்தை கெடுக்கும் விதமாக நடக்கும் இச்செயலை தடுக்க கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.