×

இருவேலி கண்மாயில் மதகு சேதம் கருவேல மரங்கள் அகற்றி கால்வாய் சீரமைக்கப்படுமா?

சாயல்குடி, டிச.16: சாயல்குடி அருகே இருவேலி பாசன கால்வாய் மற்றும் மதகு, தடுப்பணை போன்றவற்றை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாயல்குடி, உசிலங்குளம், எஸ்.தரைக்குடி, சேதுராஜபுரம், எஸ்.கீரந்தை, புல்லந்தை, பிள்ளையார்குளம், மறவர் கரிசல்குளம், கூரான்கோட்டை, அல்லிக்குளம், வெள்ளம்பல் ஆகிய பகுதிகளில் நெல், கம்பு, சோளம், நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான பனைமரங்களும் உள்ளன. மானாவாரி எனப்படும் மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது.மழை தண்ணீரை சேமிப்பதற்காக சாயல்குடி இருவேலி கண்மாயில் பொதுப்பணித் துறை சார்பில் கடந்த 1980ல் கால்வாயுடன் கூடிய மதகு கட்டப்பட்டது. அப்போது மழைக் காலங்களில் இதில் தேங்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் ஓரளவிற்கு விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

தற்போது கனமழை பெய்து காட்டு பகுதியிலிருந்து பெருக்கெடுத்து ஓடி வரும் மழை தண்ணீர் பெரிய கண்மாய்க்குள் தேங்க வழியில்லாமல் வீணாக கடலில் போய் கலந்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து வீடு போன்ற கட்டிடங்களை கட்டி விட்டனர். இதனால் கண்மாய், வரத்து கால்வாய் காணாமல் போய் விட்டது. இக்கண்மாயில் மதகு, தடுப்பணை கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டதால், அவை சேதமடைந்து சீமை கருவேல மரம் வளர்ந்து புதர்மண்டி சேதமடைந்து கிடக்கிறது. கால்வாயினை தூர்வாராததால் மண் குவியல் மேவி தடுப்பணையின் அளவு குறைந்து தாழ்வாகி விட்டது. மதகும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் தண்ணீரை தேங்க வழியில்லாமல், வீணாக கடலில் போய் கலக்கிறது.மேலும் கால்வாயில் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் வரத்து கால்வாய் தூர்ந்து போய் கிடக்கிறது. எனவே அவசர கால விவசாய நலன் கருதி கருவேல மரங்களை அகற்றி, கால்வாயினை தூர்வாரி, மதகுவை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை