கிருஷ்ணகிரி, செப்.11: இளைஞர்கள் கொடும் நோய்களால் இறப்பதை விட, சாலை விபத்துகளிலேயே அதிகம் இறப்பதாக டிஎஸ்பி வேதனை தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் மாவட்ட காவல்துறை மற்றும் சோனா திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் இணைந்து, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பயிற்சி மைய நிர்வாகி சையத்அசார் மற்றும் பயிற்றுநர் தேவாஸ்ரீராம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், டிஎஸ்பி குமார் பேசுகையில், ‘உயர்நீதிமன்ற உத்தரவின்படி, உயர்த்தப்பட்ட அபராதத் தொகை நடைமுறைக்கு வந்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் விதிக்கப்பட்ட ₹100 அபராதம், தற்போது ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் நோய்களால் இறப்பதை விட, சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்தும், கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும்,’ என்றார். விழிப்புணர்வில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள் குறித்த குறும்படம் காண்பிக்கப்பட்டது.