சாயல்குடி, ஜூன் 4: கடலாடி அருகே பாப்பாகுளம் கிராமத்தில் உள்ள குருத்தடி முனீஸ்வரர் கோயில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. நடுமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடந்தது. கடலாடி-முதுகுளத்தூர் சாலையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரையிலான நடுமாடுகள் போட்டியில் 14 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது.
இதில் எம்.கரிசல்குளம் பாண்டித்தேவர் மாடுகள் முதலிடத்தையும், மருங்கூர் நாச்சியார் மாடுகள் இரண்டாம் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் சிங்கிலிபட்டி ஆனந்த கண்ணன் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
5 கிலோ மீட்டர் தூரம் நடந்த சின்ன மாடுகள் பந்தயத்தில் 13 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டது. இதில் உசிலங்குளம் கருப்புத்துரை பாண்டியன் மாடுகள் முதல் இடத்தையும், தஞ்சாவூர் மருங்கூர் நாச்சியார் மாடுகள் இரண்டாமிடத்தையும், கம்பத்துபட்டி வீரசின்னராசு மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றது. முதல் மூன்று இடங்களை பெற்ற மாடுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, சாரதிக்கு பரிசுகளும், பாத்திரங்களும் வழங்கப்பட்டது.