ராமநாதபுரம், மே 19: ராமநாதபுரம் கேணிக்கரை நான்குமுனை சந்திப்பில் நேற்று அதிகாலை வைக்கோல் ஏற்ற சென்ற மினி லாரியும், ஆம்னி வேனும் மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். ராமநாதபுரம் மகாசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(38). இவர் மினி லாரியில் ராமநாதபுரம் பஸ்ஸடாண்ட் வழியாக தேவிபட்டிணத்திற்கு வைக்கோல் ஏற்றுவதற்காக 4 தொழிலாளர்களுடன் சென்றுள்ளார். ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் ஆம்னி வேனில் கேணிக்கரை வழியாக அரண்மனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கேணிக்கரை சந்திப்பில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் லாரி டிரைவர் சரவணன், உடன் சென்ற பசும்பொன் நகரை சேர்ந்த சேகர்(43), சரவணன்(38), ராஜூ (56), முருகன் (40) மற்றும் ஆம்னி டிரைவர் மகாலிங்கம் (48) ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.