×

அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: நாளை மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு: நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் எச்சரிக்கை

கரூர், மே 16: கரூர் கலெக்டரும்.மாவட்டதேர்தல் நடத்தும்  அலுவலருமான அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் 19ம்தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகளின்படி மே 17ம்தேதி (நாளை) மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ, அந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவோ கூடாது. மேலும், தேர்தல் தொடர்பான தகவல்களை ஒளிப்பதிவிலோ, தொலைக் காட்சியிலோ அல்லது எந்தவித மின்னணு தகவல் தொடர்பு முறையிலோ காட்சிப்படுத்தக்கூடாது. இசை நிகழ்ச்சிகள் அல்லது எந்தவித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.
 
தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட, அந்த தொகுதியில் வாக்காளராக இல்லாத அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் நாளை (17ம்தேதி) மாலை 6மணிக்கு மேல் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். நாளை (17ம்தேதி)  மாலை 6மணிக்கு மேல் இயக்கப்படும் அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள் இயக்க அனுமதி இல்லை. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126(1)(பி) ன்படி தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளோ, வாக்கெடுப்புகளோ, கணக்கெடுப்புகளோ, தேர்தல் நாளுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Aravagurki ,
× RELATED அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக...